செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 39 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2020-10-04 15:24 IST   |   Update On 2020-10-04 15:24:00 IST
ஈரோடு கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 39 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில். சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று சம்பத்நகர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது.

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான தீப்தி அறிவுநிதி தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர், நீதிபதி ஆர்.மாலதி தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ்.லட்சுமி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி எம்.தனபால், முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி.சிவக்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் கே.ரமேஷ், ஈரோடு அட்வகேட் அசோசியேசன் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் இருந்த 39 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 3 கோடியே 51 லட்சத்து 15 ஆயிரத்து 68 ரூபாய் மதிப்பில் உள்ள சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தது. குறிப்பாக 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாக பிரிவினை வழக்கில் சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சினைக்கு, இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்வு காணப்பட்டது. கொரோனா காலத்திலும் மக்கள் நீதிமன்றம் மூலம் தங்கள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு காண உதவிய நீதிபதிகளுக்கு வழக்கில் தீர்வு பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News