செய்திகள்
கைது

ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த 5 பேர் கைது

Published On 2020-10-02 15:33 IST   |   Update On 2020-10-02 15:33:00 IST
வாகன சோதனையில் ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கம் சாலை சந்திப்பில் நேற்று காலை கூடுவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அந்த வழியாக காரில் வந்தவர்கள் வேகமாக செல்ல முயன்றனர். இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அந்த காரை வழிமறித்து விசாரித்தபோது அந்த காரில் இருந்த 5 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் காரை சோதனை செய்தார். அதில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் இருந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரோஸ் பாக்கியம் (வயது 40), சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (46), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்திவாசன் (27), ரமேஷ் குமார் (30), கடலூர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா (24) என்பது தெரியவந்தது. அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News