செய்திகள்
கொணவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கொணவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் அமானுல்லா. இவர் கத்தார் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ரிஸ்வானா (வயது 30). இவர்கள் கொணவட்டத்தில் புதிதாக வீடு கட்டினர். அதனால் ஏற்கனவே குடியிருந்த வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு எடுத்துசென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு ரிஸ்வானா முள்ளிபாளையத்தில் உள்ள அவருடைய அம்மா வீட்டில் தூங்க சென்றார். இந்த நிலையில் நேற்று காலை புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு ரிஸ்வானா வந்தார். அங்கு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து ரிஸ்வானா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.