செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

வேப்பங்குழியில் அரசு ஊழியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

Published On 2020-09-30 07:17 GMT   |   Update On 2020-09-30 07:17 GMT
வேப்பங்குழியில் அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன் (வயது 37). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்று, கடந்த ஒரு வார காலமாக அவரது சொந்த ஊரான ஆங்கியனூரில் குடும்பத்துடன் தங்கி, வயல் வேலைகளை கவனித்து வந்தார்.

நேற்று வேலைகளை முடித்து விட்டு வேப்பங்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோவின் கதவு திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் கீழே சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து அவர், கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவருடைய வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், வீட்டு கதவின் பூட்டு மற்றும் பீரோ கதவை உடைக்காமலேயே மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது.

இதனால் கருப்பையன் சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டோ அல்லது மாற்றுச்சாவியை பயன்படுத்தியோ மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News