செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் நகர மன்ற தலைவர்

திருவேற்காட்டில் அ.தி.மு.க. முன்னாள் நகர மன்ற தலைவரை கொலை செய்ய முயற்சி

Published On 2020-09-22 11:25 GMT   |   Update On 2020-09-22 11:25 GMT
திருவேற்காட்டில் அ.தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவரை வெட்டிக்கொலை செய்ய முயன்ற மர்ம நபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி:

திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 52). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், திருவேற்காடு முன்னாள் நகரமன்ற தலைவராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

திருவேற்காடு அருகே சென்றபோது பின்னால் லோடு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள், இவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் இடித்தனர். இதில் மகேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் லோடு ஆட்டோவிலிருந்து கையில் அரிவாளுடன் இறங்கிய மர்ம நபர்களை கண்டதும் மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

மர்ம நபர்கள் விடாமல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டினர். இதில் மகேந்திரனின் தலையில் லேசான வெட்டு காயம் ஏற்பட்டது. சிறிது தூரம் ஓடிய பின்னர் அங்கு அதிகளவில் கூடியிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் மர்ம நபர்கள் திரும்பி சென்று விட்டனர்.

இந்த கொலை முயற்சியில் காயமடைந்த மகேந்திரனை பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ காட்சியில், வேட்டி, சட்டையுடன் மகேந்திரன் ஓடி வருவதும், அவரது பின்னால் விடாமல் ஆயுதங்களுடன் வாலிபர்கள் விரட்டி வருவதும் பதிவாகியுள்ளது. பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் மகேந்திரன் நுழைந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடியாமல் மர்மநபர்கள் திரும்பி ஓடுவதும் அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து திருவேற்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News