செய்திகள்
போயம்பாளையம் அருகே தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 18 பேர் கைது
போயம்பாளையம் அருகே தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் போயம்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது 18 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் சூதாட்ட கும்பல் தப்பி செல்ல முயன்றது. ஆனால் போலீசார் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் கிளப் மேலாளர் சுந்தர்ராஜ், பொறுப்பாளர் கந்தசாமி, சரவணன் உள்பட 18 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 18 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரத்து 380ஐ பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.