செய்திகள்
தங்கம் பறிமுதல்

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Published On 2020-09-08 09:26 GMT   |   Update On 2020-09-08 09:26 GMT
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி:

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கானோர் திருச்சி வந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர். விமானம் தரையிறங்கியதும் அதில் வந்த 176 பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சேகர் (வயது 43), சிவகங்கையை சேர்ந்த சசிவரன், கடலூரை சேர்ந்த முருகவேல் ஆகிய 3 பேரின் உடைமைகளை சோதனை செய்தபோது அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இயக்கப்படும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News