செய்திகள்
பாஜக தலைவர் எல் முருகன்

பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி: பாஜக சார்பில் மாவட்ட கலெக்டர்களிடம் மனு- எல் முருகன்

Published On 2020-09-07 03:02 GMT   |   Update On 2020-09-07 03:02 GMT
பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளிக்கப்படும் என்று பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9½ கோடி நலிவுற்ற விவசாயிகள் நிதி உதவி பெற்று வருகின்றனர். 4 மாதத்துக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் என ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நலிவுற்ற விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 40 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே விவசாயிகள் அல்லாத பல்லாயிரக்கணக்கானோர் இந்த உதவித்தொகையை பெற்று வருகிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் மோசடியாக நிதியை பயன்படுத்த நினைப்பது மிகப்பெரிய குற்றமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டு நலிவுற்ற விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்யவும், விவசாயிகள் அல்லாதோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி 7-ந் தேதி (இன்று) காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட கலெக்டரிடமும் மனு அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News