செய்திகள்
தற்கொலை

கறம்பக்குடி வாலிபர் சிங்கப்பூரில் தற்கொலை- உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

Published On 2020-09-06 12:43 IST   |   Update On 2020-09-06 12:43:00 IST
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததால் சிங்கப்பூரில் இருந்த கறம்பக்குடி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவருடைய மகன் சந்துரு என்ற சந்திரசேகரன்(வயது 28). இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றார். 5 மாதங்கள் அங்கு வேலை பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அவர் வேலை இழந்தார்.

கடன் வாங்கி வெளிநாடு சென்ற நிலையில் வேலை இல்லாததால் அவர் மனமுடைந்தார். இது குறித்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் வருத்தத்துடன் போனில் பேசியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், சந்துருவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் உள்ள சந்துருவின் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்ப வறுமையை போக்க வெளிநாடு சென்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News