செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தீபாவளி பட்டாசு வெடித்ததை காரணம் காட்டி வாலிபருக்கு போலீஸ் வேலை வழங்க மறுத்தது செல்லாது- ஐகோர்ட்

Published On 2020-09-06 07:24 IST   |   Update On 2020-09-06 07:24:00 IST
தீபாவளி பட்டாசு வெடித்ததை காரணம் காட்டிவாலிபருக்கு போலீஸ் வேலை வழங்க மறுத்தது செல்லாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதில், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் காவலர் பணிக்கு விண்ணப்பித்து, எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்றார். ஆனால், அவர் மீது உள்ள குற்ற வழக்கை மறைத்ததாக கூறி அவருக்கு பணி நியமன உத்தரவு வழங்கவில்லை.

இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், “2018-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடித்ததாக பாப்பிரெட்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண வழக்கு என்பதால், இதுகுறித்த விவரம் எனக்கு தெரியாது. அதனால் விண்ணப்பத்தில் இந்த வழக்கை குறிப்பிடவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வி.பார்த்திபன் விசாரித்தார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “வழக்கு உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அதை தெரிந்து இருந்தும் மனுதாரர் வேண்டுமென்றே மறைத்துள்ளார்” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி.பார்த்திபன், “தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததை தவிர வேறு எந்த குற்றமும் மனுதாரர் பாலாஜி செய்யவில்லை. பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததை காரணம் காட்டி போலீஸ் வேலைக்கு தகுதியிழப்பு செய்து வேலை வழங்க மறுத்தது செல்லாது. பணியாளர் தேர்வு விஷயத்தில் அதிகாரிகள் எந்திரத்தனமாக இருக்கக் கூடாது. எனவே, மனுதாரருக்கு 8 வாரத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News