காலாப்பட்டில் பழைய இரும்பு வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்
சேதராப்பட்டு:
திருச்சி மணப்பாறை தாலுக்கா செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முகமது அனிபா (வயது56). பழைய இரும்பு வியாபாரி. இவர் பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்று பழைய இரும்பு பொருட்கள் வாங்க முகமது அனிபா அந்த நிறுவனத்துக்கு வந்திருந்தார். அப்போது பெரிய காலாப்பட்டு குப்பத்தை சேர்ந்த சந்திரன், மூர்த்தி மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் முகமது அனிபாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினர்.
இதனை முகமது அனிபா தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சந்திரன் உள்பட 3 பேரும் சேர்ந்து அவரை கையாலும், செருப்பாலும் தாக்கினர். மேலும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த முகமது அனிபா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்கு பதிவு செய்து சந்திரன் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்.