செய்திகள்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை படத்தில் காணலாம்.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கின

Published On 2020-08-28 17:47 IST   |   Update On 2020-08-28 17:47:00 IST
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ வாவல் மீன் ரூ.1,100-க்கு விற்பனையானது.
கோட்டைப்பட்டினம்:

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து தினமும் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கடலில் பெரிய அளவில் மீன்கள் சிக்கவில்லை. கிடைத்த மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். இந்த மீன்களை அவர்கள் விற்றபோது டீசல் மற்றும் ஐஸ்கட்டிகள் வாங்கியதற்கு கூட தேறவில்லை. இதனால், மீனவர்கள் நஷ்டம் அடைந்து வந்தனர்.

இந்தநிலையில், இங்கிருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கி இருந்தன.

பிடிக்கப்பட்ட மீன்கள் துறைமுகத்திலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கோவை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி, போட்டு வாங்கி சென்றனர்.

அந்தவகையில் வாவல் மீன் ஒரு கிலோ ரூ.1,100-க்கும், பாறை ரூ.400-க்கும், கிழங்கன் ரூ.350-க்கும், நகரை ரூ.200-க்கும், வஞ்சிரம் ரூ.500-க்கும், காரல் ரூ.100-க்கும், நெத்தில் ரூ.80-க்கும், திருக்கை ரூ.150-க்கும் விற்பனையானது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு திருக்கை மீன் மட்டும் 80 கிலோ எடை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News