செய்திகள்
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிப்பு
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. வேலூர் மாநகராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் சளி, இருமல் காணப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று மாநகராட்சி பகுதியில் 11 சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
3-வது மண்டலம் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நடந்த முகாமில் 106 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. முகாமை சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் லூர்துசாமி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். இதேபோல சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் பகுதியில் 2-வது மண்டலம் சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. அங்கு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.
மேலும் முகாம்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகளும் பரிசோதனை செய்து கொண்டனர். ஒரேநாளில் 752 பேருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டதாக நகர்நல அலுவலர் சித்ரசேனா தெரிவித்தார்.