செய்திகள்
ஆன்லைன் வகுப்புகளில் படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி
செல்போன் சேவை குறைபாடு காரணமாக ஆன் லைன் வகுப்புகளில் படிக்கமுடியாமல் கிராமப்புற மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூரில் கொரோனா தொற்று பரவலால் தனியார் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் பகுதியில் உள்ள முக்கிய ஊர்களில் வசிக்கும் மாணவர்களுக்கு செல்போன் சேவை கிடைத்து வருவதால் ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு பாடங்களை படித்து வருகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் சேவையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகிறது. இதனால் ஆன் லைன் வகுப்புகளில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு அலைவரிசையை பயன்படுத்தினாலும் அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்த முடிய வில்லை. இதனால் பாடங்களை புரிந்து படிக்க முடியாமல் உள்ளது.
மேலும் வீடுகளுக்குள் செல்போன் சேவை கிடைப்பது இல்லை. இதனால் திறந்த வெளி அல்லது மேடான வனப்பகுதிக்கு மாணவர்கள் இடம் பெயர்ந்து அலைவரிசை கிடைக்கும் பகுதியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பாடங்களை படிக்கின்றனர். இதுதவிர மழைக்காலம் என்பதால் திறந்த வெளியிலும் நீண்ட நேரம் அமர முடிய வில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பாடங்களை புரிந்து படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சியில் பல மாதங்களாக பி.எஸ்.என்.எல். அலைவரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தனியார் செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்க வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பி.எஸ்.என்.எல். சேவையும் கிடைக்காமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அனைத்து பகுதியிலும் செல்போன் சேவை சீராக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் அலைவரிசை சேவையும் முக்கிய இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் சேவையும் செயல் இழந்து விடுகிறது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.