செய்திகள்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் வேலைநிறுத்தம்
மாநிலம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் உதயகுமார், செயலாளர் சரவணன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசாமி ஆகியோர் கூறியதாவது:-
உறுப்பினர்களுக்கு சங்கங்களே நேரடியாக கடன் வழங்க அனுமதிக்கவேண்டும். வருமான வரித்துறையின் 2 சதவீத டி.டி.எஸ். வரியை ரத்து செய்யவேண்டும். அங்காடி பணியாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவேண்டும். நகை ஏல குறைவு தொகையை நஷ்டக்கணக்கில் தாக்கல் செய்யவேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் புதிதாக மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்கும் முயற்சியை கைவிடவேண்டும். ஊதிய உயர்வு அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டதை உறுதி செய்யவேண்டும். சம்பளம் வழங்க இயலாத சங்கங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். செயலாளர் பொது மாறுதலினை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.இந்நிலையில் 24-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 125 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.