செய்திகள்
சென்னிமலையில் கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பா.ம.க.வினர் கோரிக்கை
சென்னிமலையில் கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பாமகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் தா.ப.பரமேஸ்வரன் தலைமையில் துணைத்தலைவர்கள் எஸ்.எல்.பரமசிவம், என்.ஆர்.வடிவேல், மாவட்ட செயலாளர்கள் பி.டி.ராசு, பிரபு மற்றும் கட்சியினர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
சென்னிமலை பகுதியில் உள்ள கிராமங்களில் அரசு விதிகளை மீறி கனிம வளங்களை கடத்தி வேறு பகுதியில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள். பிரசித்தி பெற்ற சென்னிமலை கோவிலின் அடிவாரத்தில் பாறைகள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியில் எந்திரங்களை கொண்டு சுரண்டப்படுகிறது. இதனால் சென்னிமலையில் கோவில் உள்ள மலையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கீழடிக்கு நிகரான கொடுமணல் பகுதிக்கு சிறிது தூரத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து வருவாய் துறையில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பசுவப்பட்டி, வெப்பிலி, முருங்கத்தொழுவு, சிறுகளஞ்சி, காசிபாளையம், பனியம்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.