செய்திகள்
மினிலாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
ஈரோட்டில் மினிலாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் காசுக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் குணபிரசாத் (வயது 25). தையல் தொழிலாளி. இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் மகன் நல்லசிவம் (26) திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குணபிரசாத்துக்கும், நல்லசிவத்துக்கும் திருமணம் ஆகவில்லை. அவர்கள் 2 பேரும் நேற்று மதியம் ஈரோடு வருவதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் திங்களூரில் இருந்து புறப்பட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளை குணபிரசாத் ஓட்டினார். பின்னால் நல்லசிவம் உட்கார்ந்து இருந்தார். அவர்கள் ஈரோடு நசியனூர்ரோடு வில்லரசம்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்தார்கள்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய குணபிரசாத் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே ஈரோட்டில் இருந்து நசியனூர் நோக்கி சென்றுகொண்டு இருந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குணபிரசாத், நல்லசிவம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்த குணபிரசாத், நல்லசிவம் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.