செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

பட்ஜெட்டுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வ ஒப்புதல்- 20-ந்தேதி சட்டசபை கூடுகிறது?

Published On 2020-07-17 11:38 IST   |   Update On 2020-07-17 13:03:00 IST
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து எழுத்துப்பூர்வ உத்தரவு வந்துள்ளது. எனவே 20-ந்தேதி சட்டசபை கூடும் என்று தெரிகிறது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி இடைக்கால பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான அரசின் செலவினத்துக்கு இதன்மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து அரசு செலவினங்களுக்காக முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு தயாரானது. இதற்காக ரூ.9 ஆயிரத்து 500 கோடியில் முழு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

ஆனால் கொரோனா காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பட்ஜெட்டில் சீரமைத்து அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதை ஏற்று ரூ.9 ஆயிரம் கோடிக்கு திருத்தம் செய்து சீரமைத்து பட்ஜெட்டை மத்திய அரசுக்கு புதுவை மாநில அரசு அனுப்பியது.

இதற்கு கடந்த ஜூன் மாத இறுதிக்குள் ஒப்புதல் கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதமாகி வந்தது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி பட்ஜெட்டிற்கு அனுமதி அளித்து விட்டதாக டெல்லியில் இருந்து புதுவை அரசுக்கு வாய்மொழியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து பட்ஜெட்டுக்கான எழுத்துப்பூர்வ அனுமதி வந்து விடும் என்று கருதி பட்ஜெட் அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக மறுநாள் (10-ந் தேதி) அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி எழுத்துப்பூர்வ அனுமதி வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்தநிலையில் அமைச்சரவை கூட்டம் 5 நிமிடத்திலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்தால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால் புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்தது.

இந்தநிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்ய புதுவை அமைச்சர்கள் மீண்டும் கடந்த 14-ந் தேதி கூடிப்பேசினார்கள். அப்போது ஓரிரு நாட்களுக்குப் பின் முடிவு எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

எதிர்பார்த்தபடி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அனுப்பிய எழுத்துப்பூர்வ கடிதம் புதுவை அரசுக்கு நேற்று கிடைத்தது. இதையடுத்து சட்டசபையை கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணியில் அரசு வேகம் காட்டி உள்ளது. அதன்படி வருகிற 20-ந் தேதி புதுச்சேரி சட்டசபையை கூட்ட இருப்பதாகவும் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறைந்த கால அவகாசத்திலேயே நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Similar News