செய்திகள்
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய விவகாரம்- கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுச்சேரியில் சரண் அடைந்தார்
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பான புகாரில் தேடப்பட்டு வந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் இன்று சரண் அடைந்தார்.
புதுச்சேரி:
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு நபரான சுரேந்திரன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், சுரேந்திரன் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை சென்னை அழைத்து வருவதற்காக தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்தனர்.