செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் பாப்பாத்தி இறந்து கிடந்த வீட்டின் முன்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

வேறொரு பெண்ணை அழைத்து வந்ததால் கணவருடன் தகராறு - மனைவி மரணம்

Published On 2020-07-15 07:36 GMT   |   Update On 2020-07-15 07:36 GMT
நெல்லிக்குப்பத்தில் வேறொரு பெண்ணை அழைத்து வந்ததால் கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 45). இவரது மனைவி பாப்பாத்தி(40). கருணாநிதி தனது மனைவி பாப்பாத்தியுடன் பாலூரில் வசித்து வந்தார். மேலும் அவர் கரும்பு வெட்டும் பணிக்காக அடிக்கடி வெளியூர் சென்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் வேலைக்காக வெளியூர் சென்றிருந்த கருணாநிதி, நேற்று முன்தினம் நெல்லிக்குப்பத்திற்கு ஒரு பெண்ணுடன் வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த பாப்பாத்தி, தனது உறவினர்களுடன் நெல்லிக்குப்பத்திற்கு சென்று கருணாநிதியிடம் அந்த பெண் யார் என்பது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் பாப்பாத்தி தனியாக கருணாநிதியை பார்க்க சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை பாப்பாத்தி, நெல்லிக்குப்பத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டு முன்பு மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நெல்லிக்குப்பம்போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, தவசெல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கருணாநிதி மற்றும் அவரது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லை. தொடர்ந்து பாப்பாத்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News