செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சிவகங்கையில் 17 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-07-13 14:02 GMT   |   Update On 2020-07-13 14:02 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 14 சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் மருத்துவக்குழு மூலம் கண்காணிக்கப்பட்டு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 12 மருத்துவக்குழு மூலம் கொரோனா நோயாளிகள், கண்காணிப்பு நோயாளிகளின் தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிப்பு, கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள நடமாடும் மருத்துவக்குழு 5 வட்டாரங்களில் இருந்து கொரோனா தடுப்பு பணி, மாற்றுப்பணிக்காக சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். ஒவ்வொரு வட்டாரத்தில் ஆய்வக உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர் அடங்கிய குழு மூலம் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு தினந்தோறும் சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுவரை 17ஆயிரத்து 813 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு 877 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். போலீசார் 388 பேருக்கும், சுகாதார களப்பணியாளர்கள் 426 பேருக்கும் , கர்ப்பிணிகள் 1,720 பேருக்கும், சென்னையில் இருந்து வந்தவர்கள் 4,746 பேருக்கும், வெளிமாநிலத்தினர் 1,657 பேருக்கும், வெளிநாட்டினர் 634 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா நோயாளி சிகிச்சைக்கு 1083 படுக்கை வசதிகள் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தயார் செய்யப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் எந்த அறிகுறியும் இல்லாத கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏதுவாக 999 படுக்கை வசதியுடன் உள்ள கோவிட் கேர் சென்டர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 85 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்குடி நகராட்சி மற்றும் சாக்கோட்டை வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை சளி மாதிரிகள் எடுக்க நடமாடும் கொரோனா பரிசோதனை ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை மற்றும் துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் செயல்பட்டு கொரோனா தொடர்பாக பொதுமக்களிடம் புகார்களை பெறவும் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்க மருத்துவக்குழுவின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News