செய்திகள்
ஊட்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ஊட்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார்(வயது 34). விவசாயி. இவர் தேனாடுகம்பையை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். அந்த நிலத்தில் நேற்று முன்தினம் உழவு பணியை மேற்கொண்டார். அப்போது பக்கத்து தோட்ட விவசாயி செந்தில்குமார் என்பவர், அந்த நிலத்தில் உழவு பணி மேற்கொள்ளக்கூடாது எனக்கூறி தடுத்ததாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்குமார் பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்து, உடலில் ஏற்றி கொலை செய்து விடுவேன் என்று நரேஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நரேஷ்குமார் தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.