செய்திகள்
பவானி லட்சுமிநகர் சோதனை சாவடியில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

ஈரோடு மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு - அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க உத்தரவு

Published On 2020-06-18 20:00 IST   |   Update On 2020-06-18 20:00:00 IST
ஈரோடு மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளில் கலெக்டர் நேற்று ஆய்வு செய்து அனைத்து வாகனங்களையும் முழுமையாக கண்காணிக்க உத்தரவிட்டார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பிற மாநிலங்கள், சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த தொற்று சமூக பரவலாக மாறி, ஈரோடு மாவட்ட பகுதியிலேயே இருக்கும் மக்களுக்கும் வந்து விடாமல் இருக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக பிற மாநிலங்கள், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் அந்தந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

மாவட்ட எல்லையோர சோதனைச்சாவடிகளின் செயல்பாட்டை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு செய்தார். பவானி அருகே லட்சுமிநகர் பகுதியில் உள்ள எல்லையோர சோதனைச்சாவடிக்கு சென்ற அவர் அங்கு போலீசாருடன் சேர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். பிற மண்டலங்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் இ-பாஸ் அனுமதி பெற்று உள்ளனரா? வாகனங்களில் இடைவெளி விடப்பட்டு உட்கார்ந்து உள்ளனரா? முகக்கவசம் அணிந்து உள்ளனரா? என்பது சோதனை செய்யப்பட்டது.

பின்னர் போலீசாரிடம் பேசிய கலெக்டர் அனைத்து வகை வாகனங்களையும் கண்டிப்பாக கண்காணித்து சோதனை செய்ய வேண்டும். எல்லையை கடந்து வருபவர்களுக்கு கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுபோல் அவர் மேலும் சில சோதனைச்சாவடிகளையும் நேற்று ஆய்வு செய்தார்.

Similar News