செய்திகள்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் அன்னதானம் வாங்குவதற்காக வரிசையில் நின்ற மக்கள்

ஈரோடு மாநகராட்சியில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கியது

Published On 2020-06-18 13:22 IST   |   Update On 2020-06-18 13:22:00 IST
ஈரோடு மாநகராட்சியில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது.
ஈரோடு:

தமிழ்நாடு அரசின் சார்பில் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. மதிய நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்களின் வசதிக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை பெற்று உள்ளது.

கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன. இதனால் கோவில்களில் அன்னதான திட்டமும் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியை பொறுத்தவரை கோவில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டம் கோவில்களில் நிறுத்தப்பட்டாலும், அந்தந்த பகுதி அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஈரோட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்கள் முழுமையாக கோவில்களில் அன்னதானக்கூடம் திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் அன்னதான திட்டம் கோவில்களில் செயல்பட தொடங்கியது. ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், கொங்கலம்மன் கோவில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆஞ்சநேயர் கோவில், திண்டல் மலை முருகன் கோவில் என 6 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட தொடங்கியது.

பெரிய மாரியம்மன் கோவிலில் நேற்று அன்னதான திட்டத்தில் சாப்பிடும் ஏழைகள் வரிசையில் காத்து நின்றனர். சமூக இடைவெளி விட்டு அவர்கள் உள்ளே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Similar News