செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கிருஷ்ணகிரியில் 3 சுகாதார ஆய்வாளர்கள், கர்ப்பிணி உள்பட 12 பேருக்கு கொரோனா

Published On 2020-06-18 13:13 IST   |   Update On 2020-06-18 13:13:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 சுகாதார ஆய்வாளர்கள், கர்ப்பிணி உள்பட 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து பாலாஜி நகரில் 52 வயது பெண், அவரது கணவர், மகள், மருமகன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி இவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஆவடியில் இருந்து வந்த உறவுக்கார ஒரு பெண் உள்பட 2 பேர் வந்து சென்றனர். இதனால் கிருஷ்ணகிரியை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கடந்த 14-ந் தேதி நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்த மற்ற 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது 27 வயது மகளுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் பர்கூரை அடுத்த சீமனூரை சேர்ந்த 27 வயது ஆண், சென்னை ஆவடியில் தங்கி வேலை செய்து வந்தார். இவரது மனைவியான 24 வயது பெண், 7 மாத கர்ப்பமாக உள்ளதால், சொந்த ஊருக்கு செல்ல இருவரும், மோட்டார் சைக்கிளில் கடந்த 14-ந் தேதி சீமனூருக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் பர்கூர் அருகே உள்ள செட்டிப்பள்ளியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு, பெங்களூருவில் இருந்து வந்த 80 வயது மூதாட்டியால், செட்டிப்பள்ளியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று பரவி கடந்த 13-ந் தேதி அவர் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரிய செட்டிப்பள்ளியை சேர்ந்த 48 வயது ஆண், 33 வயது பெண், 54 வயது பெண், சின்ன செட்டிப்பள்ளியை சேர்ந்த 45 வயது பெண், 33 வயது ஆண், 41 வயது ஆண், 15 வயது சிறுவன் ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவைதவிர கிருஷ்ணகிரி நகராட்சியில் பணியாற்றி வந்த 40 வயது சுகாதார ஆய்வாளர், சென்னைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்று விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி திரும்பினார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் 50 வயது ஆண் மற்றும் 57 வயது ஆண் ஆகியோர் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் சென்னை மாநகராட்சிக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக சென்றனர். இந்தநிலையில் சென்னையில் இவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 2 பேருக்கும் கடந்த 15-ந் தேதி கொரோனா பரிசோதனைக்காக சளி, ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரும் நேற்று முன்தினம் ஓசூருக்கு வந்தனர். அவர்கள் 2 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Similar News