செய்திகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது- கலெக்டர் தகவல்

Published On 2020-06-17 16:18 IST   |   Update On 2020-06-17 16:18:00 IST
நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக துணை முதல் அமைச்சர் சட்ட பேரவையில் கடந்த 2019-20-ம் ஆண்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கையில் மலையிட பாதுகாப்பு குழும பகுதிகளில் திட்ட அனுமதி விரைவாக வழங்கும் வகையில் ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முதன்மை செயலாளர், நகர் ஊரமைப்பு இயக்குனர் ஆகியோரின் கடிதத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று மலையிட பாதுகாப்பு குழும பகுதிகளில் திட்ட அனுமதி விரைவாக ஒப்புதல் வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது.

அரசின் இசைவு பெற்ற முழுமை திட்டம் உள்ள மலை இடங்களில் மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்க நகர் ஊரமைப்பு துறையின் கூட்டு உள்ளூர் திட்ட குழுமம், புதுநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர், செயலர்கள், மண்டல துணை இயக்குனர், உதவி இயக்குனர்கள், நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு மலையிடம் அல்லாத பகுதிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அதிகார பகிர்வை போன்றே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. முழுமை திட்டம் உள்ள மலை இடங்களில் திட்ட அனுமதி வழங்குவதற்கு கனிமவளம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் மாவட்ட வன அலுவலர், வனத்துறை தலைவரின் இசைவினை பெற்று ஆட்சேபனை இன்மை கடிதம் வழங்கலாம்.

வனத்துறை தலைவரின் இசைவு ஒரு மாதத்திற்குள் அளிக்கவில்லை எனில், இசைவு அளிக்கப்பட்டதாக கருதி மாவட்ட வன அலுவலர் ஆட்சேபனை இன்மை கடிதம் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் ஆட்சேபனை இன்மை கடிதம் பெற்று, அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. முழுமை திட்டம், விரிவு அபிவிருத்தி திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள நில பயன்பாட்டின் வகைப்பாட்டை மாற்றம் செய்வதற்கான உத்தேசங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் முன் அனுமதி பெறவேண்டும். முழுமை திட்டம் இல்லாத மலை இடங்களில் கட்டிடங்களை பொறுத்தமட்டில் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும். மனைப்பிரிவை பொறுத்தமட்டில் நகர் பகுதி என்றால் ஒரு ஹெக்டேருக்கும், ஊரகப்பகுதி எனில் 2 ஹெக்டேருக்கும் மிகும் உத்தேசங்களுக்கு மலையிட பாதுகாப்பு குழுமத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

முழுமை திட்டம் அல்லாத இடங்களில் திட்ட அனுமதி வழங்குவதற்கு வனம், கனிம வளம் மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய 3 துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரின் ஆட்சேபனையின்மை கடிதம் பெற்று அனுமதி வழங்கவேண்டும். பாதுகாப்பு குழும பகுதிகளில் 15 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட கட்டிடங்கள், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பு வரையிலும், ஊராட்சி பகுதிகளில் 2 ஹெக்டேர் நிலப்பரப்பு வரையிலும் அமையும். மனைப்பிரிவு உத்தேசம் ஆகியவற்றில் மாவட்ட கலெக்டர் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் குழுவின் ஒப்புதல் பெற்று கோவை மண்டல அளவில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. மேற்படி வரம்பிற்கு மேல் பெறப்படும் கட்டிடம், மனைப்பிரிவு உபதேசங்கள், நில பயன் மாற்றம் குறித்த உத்தேச ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News