செய்திகள்
கொலை

குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தாய், தங்கையை அடித்து கொன்ற விவசாயி

Published On 2020-06-10 19:29 IST   |   Update On 2020-06-10 19:29:00 IST
குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தாய், தங்கையை விவசாயி அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியாத்தம்:

குடியாத்தம் பரதராமி அருகே உள்ள தலைவர் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி இந்திராணி (வயது 70), மகன் முனிராஜ் (45), சின்னம்மா (35), சூரியகலா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

முனிராஜ், சூரியகலா ஆகியோருக்கு திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். சின்னம்மாவுக்கு திருமணமாகவில்லை. அவர் தாய் இந்திராணியுடன் வசித்து வந்தார்.

இவர்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக முனிராஜ் அவரது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இன்று காலையில் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த முனிராஜ் தென்னை மட்டை, கம்பு, கற்களால் இந்திராணி, சின்னம்மாவை சரமாரியாக தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்து விழுந்தனர். அவர்கள் சுயநினைவை இழந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சு மற்றும் பரதராமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் சின்னம்மா பரிதாபமாக இறந்தார். இந்திராணி ஆம்புலன்சு மூலம் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவரும் இறந்துவிட்டார்.

சொத்து தகராறில் தாய், தங்கையை விவசாயி அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News