செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

கொரோனா பாதித்த பகுதியில் நாராயணசாமி ஆய்வு

Published On 2020-06-05 06:27 GMT   |   Update On 2020-06-05 06:31 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பாகூர்:

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஜிப்மர் டாக்டர், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த கேண்டீன் ஊழியருக்குகொரோனா உறுதியானது. அவர்கள் ஏற்கனவே சிறப்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது இவர்களுடன் தொடர்பில் இருந்த தவளக் குப்பம் ராமதாஸ் நகரை சேர்ந்த 34 வயது நபருக்கும், பூரணாங்குப்பம், மதி கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் வசித்து வந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் நேற்று காலை பூரணாங்குப்பம் கிராமத்திற்கு சென்று சீல் வைக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள காலங்களில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உதவிகள் கிடைக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தவளக்குப்பம் மற்றும் மதி கிருஷ்ணாபுரத்தில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாகூர் தாசில்தார் குமரன், கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி நாராயணன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் அந்த பகுதிக்கு சீல் வைத்தனர். அந்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Tags:    

Similar News