செய்திகள்
கொலை

காரைக்காலில் அரிசி ஆலை ஊழியர் அடித்துக்கொலை

Published On 2020-06-04 15:01 IST   |   Update On 2020-06-04 15:01:00 IST
புதுவை மாநிலம் காரைக்காலில் அரிசி ஆலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

புதுவை மாநிலம் காரைக்கால் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். (வயது 50). அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர்.

நேற்று இரவு மோகன் அந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்ற வந்தார். அப்போது அங்கு வந்த முகமது ரியாசுக்கும், மோகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.

ஆத்திரம் அடைந்த முகமது ரியாஸ், அவரது மனைவி பதுர்நிஷா ஆகியோர் மோகனை அங்கு உள்ள சுவற்றில் மோத செய்தனர். இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் அவரை 2 பேரும் காலால் மிதித்தனர். இதனை தடுக்க வந்த மோகனின் தந்தை பாலசுப்பிரமணியனையும் அவர்கள் தாக்கினர். இதில் தந்தை- மகனும் மயங்கினர்.

இதனை பார்த்ததும் முகமது ரியாஸ் அங்கிருந்து மனைவியுடன் தப்பி ஓடிவிட்டார். மயங்கி கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கி கொண்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மோகனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலசுப்பிரமணியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து முகமது ரியாஸ், அவரது மனைவியை தேடி வருகிறார்கள்.

Similar News