செய்திகள்
கீரனூர் அருகே விபத்தில் இறந்த போலீஸ்காரர் மனோ காருக்குள் பிணமாக கிடந்த காட்சி.

பொக்லைன் எந்திரம் மீது கார் மோதல் - தோழியுடன் போலீஸ்காரர் பலி

Published On 2020-05-30 15:57 IST   |   Update On 2020-05-30 15:57:00 IST
கீரனூர் அருகே பொக்லைன் எந்திரம் மீது கார் மோதியதில் போலீஸ்காரர் மற்றும் அவருடைய தோழி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியை சேர்ந்தவர் மனோ(வயது 35). இவர் திருச்சியில் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய தோழி கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சமீபா(30). இவர் திருச்சிக்கு வந்து மனோவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை மனோ, சமீபா மற்றும் 5 வயது சிறுமியுடன் ஒரு காரில் திருச்சியில் இருந்து கோட்டைப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை மனோ ஓட்டினார்.

கீரனூரை அடுத்த கொத்தமங்கலப்பட்டி சாலையில் சென்றபோது, எதிரே வந்த பொக்லைன் எந்திரம் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நசுங்கியது. இதனால் பலத்த காயமடைந்த மனோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சமீபாவுக்கு கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுமி காயமின்றி தப்பினாள்.

அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து சமீபா மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சமீபா பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த நல்லதங்காள்பட்டியை சேர்ந்த சரவணனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் போலீஸ்காரர், அவருடைய தோழி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News