செய்திகள்
கொரோனா வைரஸ்

அண்ணாநகரில் ரிசர்வ் வங்கி அதிகாரி-சுங்கத்துறை ஊழியர்களுக்கு கொரோனா

Published On 2020-05-16 13:57 IST   |   Update On 2020-05-16 13:57:00 IST
சென்னை அண்ணாநகரில் ரிசர்வ் வங்கி அதிகாரி மற்று சுங்கத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
போரூர்:

சென்னை அண்ணா நகர் மேற்கு 15-வது மெயின் ரோட்டில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் 36வயது நபர் ஒருவர் ரிசர்வ் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 3 நாட்களாக உடல்வலியால் அவதிப்பட்டு வந்தார்.  இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் இதில் வங்கி அதிகாரிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வங்கி அதிகாரியின் தாய், தந்தை, மனைவி, 3வயது இரட்டை  பெண் குழந்தைகள், 1வயது ஆண் குழந்தை உள்ளிட்டோர் சுகாதார துறையினரால்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அதே பகுதி மத்திய வருவாய்த்துறை குடியிருப்பில் தங்கி பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை கப்பல் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 28வயதுடைய இளைஞர்கள் 3 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் அதே பகுதி 17-வது தெரு ஜி பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57வயது நபர் ஒருவருக்கு கடந்த 3நாட்களாக உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்தது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்ற அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கும் கொரானோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரது மனைவி,மகன்கள், 2 மருமகள்கள், 2பேத்திகள் ஒரு பேரன் உள்ளிட்ட 8பேரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News