செய்திகள்
பாதை தகராறில் விவசாயி கொலை- உறவினர் கைது
சிவகங்கை அருகே பாதை தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை போலீஸ் சரகம் மேலத் தோப்பை சேர்ந்தவர் ராக்கப்பன்( வயது 60). விவசாயியான இவருக்கும் உறவினர் கருப்பையாவுக்கும் வீட்டிற்கு செல்லும் பாதை தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராக்கப்பன் தனது இடத்தில் சாராயம் காய்ச்ச முயன்றதாக சாக்கோட்டை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.
இதற்கு கருப்பையா தான் காரணம் என்று நினைத்த அவர், தகராறு செய்து அவரை தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராக்கப்பனை தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சாக்கோட்டை போலீசார் கருப்பையாவை கைது செய்தனர்.