செய்திகள்
கடலூரில் பெய்த மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

Published On 2020-04-27 18:28 IST   |   Update On 2020-04-27 18:28:00 IST
கடலூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. அதாவது 98 டிகிரி அளவில் தொடர்ச்சியாக வெயில் அளவு பதிவாகி வந்தது. இதனால் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அவ்வப்போது அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சிலர் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நுங்கு, தர்பூசணி போன்றவற்றை வாங்கி சாப்பிட்டனர்.

இந்நிலையில் கடலூரில் நேற்று காலை பொழுது மேகக்கூட்டங்களுடனே விடிந்தது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த நிலையில் 9 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரமே நீடித்தாலும், கனமழையாகவே கொட்டியது. இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும் கடந்த சில நாட்களாக வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நேற்று 30 நிமிடம் பெய்த மழை சற்று ஆறுதலை தந்தது.

இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிர்ந்து இதமான சூழ்நிலை நிலவியது. தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த கோடை மழை மண்ணை மட்டுமின்றி மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.

Similar News