செய்திகள்
சிதம்பரத்தில் காவலாளி வெட்டிக்கொலை
சிதம்பரத்தில் காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் சரகம் அம்மா பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் அம்மாபேட்டையில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். இன்று காலை காம்ப்ளக்ஸ் எதிரோ காஞ்சா வாய்க்கால் கரையோரம் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து, முழங்கால் ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தது. எனவே, நடராஜனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு வாய்க்காலில் உடலை வீசி சென்றுள்ளனர். இது குறித்து அண்ணா மலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடராஜன் பிணமாக கிடந்த இடத்தில் மீன் பிடிப்பதற்கான வலைகள் கிடந்தது. எனவே மீன் பிடிக்கும் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.