செய்திகள்
செட்டித்திருக்கோணம் கிராமத்தில் இருவர் பண்டமாற்று முறையில் பொருட்களை பரிமாறிக்கொண்டனர்

கொரோனா மீட்டெடுத்த பண்டமாற்று முறை- மகிழ்ச்சியில் கிராம மக்கள்

Published On 2020-04-24 18:53 IST   |   Update On 2020-04-24 18:53:00 IST
கொரோனா மீட்டெடுத்த பண்டமாற்று முறையால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வி.கைகாட்டி:

உலகமே கொரோனா பீதியில் உறைந்திருந்தாலும், பல நன்மைகளை செய்திருக்கிறது கொரோனா என்று சொன்னால் மிகையாகாது. கொரோனாவால் மக்கள் மத்தியில் பாரம்பரிய உணவு வகைகள் பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில், கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால், விளைந்த விவசாய பொருட்களை வெளியில் கொண்டு செல்ல வழி இல்லாத காரணத்தால் உள்ளூரில் விளையக்கூடிய பொருட்களை தங்களுக்குள்ளேயே மாற்றிக்கொள்வது என அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே செட்டித்திருக்கோணம் கிராம மக்கள் முடிவெடுத்து நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பண்டமாற்று முறையை கையில் எடுத்துள்ளனர்.

இந்த பண்டமாற்று முறையில் வரும் நன்மைகள் குறித்து செட்டித்திருக்கோணம் கிராம மக்கள் கூறியதாவது:-

பண்டமாற்று முறை வியாபாரத்தில் பணம் பிரதானமாக பார்க்கப்படுவது கிடையாது. இதனால் தாறுமாறாக விலையை ஏற்றி மக்களை வாட்டி வதைக்கும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு விலைவாசி உயர்வு என்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு முழுபலனும் விவசாயிகளை சென்றடையும். மண் சார்ந்த உணவுகளை பகிரும்போது இயல்பாகவே அது பொதுமக்களின் உடல் நலனுக்கும் நல்லதாகவே இருக்கும். பண்டமாற்று முறை மூலம் வெறும் பொருள் வியாபாரம் மட்டுமல்ல அன்பும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. யாருக்கு என்ன பொருள் வேண்டுமோ அதற்கு மாற்றாக தங்கள் வயலில் விளைந்த பொருட்களை கொடுத்து பரிமாறிக் கொள்வர். உதாரணமாக வெங்காயம் விளைவித்தவர்கள் கடலையை பரிமாறிக்கொள்வர்.

கத்தரிக்காய் உற்பத்தி செய்தவர்கள் வெண்டைக்காயை பகிர்ந்து கொள்வர். நெல் விளைவித்தவர்கள் பருத்தியை பகிர்ந்து கொள்வர். சுண்ணாம்புக்கல் உற்பத்தி செய்பவர் வெல்லம் வாங்கிக்கொள்வர்.

இதன் மூலம் பணம் பிரதான பொருளாக இருக்கவே இருக்காது. காந்தியடிகள் சொன்ன கிராம பொருளாதாரம் என்பது வெறுமனே பணத்தை மையப்படுத்துவது அல்ல. பண்டமாற்று முறை மூலம் ஆக்கப்பூர்வமான தொழில்கள் பட்டியலில் விவசாயமே பிரதான தொழிலாக முதன்மை இடத்தில் இருக்கும். இதனால் தற்சார்பு பொருளாதாரம் மேன்மை அடையும். பணப்பொருளாதாரம் மக்களை கடன்காரர்களாக ஆக்கிவிட்டது. முதன்மைப்படுத்திய பண பொருளாதாரத்தை உடனடியாக கைவிட்டு பண்டமாற்று முறைக்கு திரும்புவோம்.

இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Similar News