செய்திகள்
வழக்கு பதிவு

பவானிசாகர் அணையில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த 2 பேர் மீது வழக்கு பதிவு

Published On 2020-04-17 15:29 IST   |   Update On 2020-04-17 15:29:00 IST
பவானிசாகர் அணையில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு:

பவானிசாகர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருபவர் வாணிஸ்ரீ. இவர் நேற்று மதியம் 12 மணி அளவில் மீன்வள பாதுகாவலர் ‌ஷர்புதீன் மற்றும் குத்தகைதாரரின் மேலாளர் சம்பத் குமார் ஆகியோருடன் பவானிசாகர் மேட்டுப்பாளையம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் மூட்டை முடிச்சுகளுடன் வந்துகொண்டு இருந்தார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர் கொண்டு வந்திருந்த மூட்டையில் சுமார் 30 கிலோ ரோகு மற்றும் ஜிலேபி மீன்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது அவர் தூர மொக்கையை சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் பவானிசாகர் அணையில் சட்ட விரோதமாக மீன்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

சிறிது நேரம் கழித்து அதே பகுதியில் மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் மூட்டை முடிச்சுகளுடன் வந்தார். அவரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது வண்டியின் முன்புறம் இருந்த மூட்டையில் 20 கிலோ ரோகு மற்றும் மிர்கால் மீன்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் உள்ள சீட்டை விலக்கி பார்த்தபோது அதில் சுமார் 15 கிலோ ரோகு மட்டும் ஜிலேபி மீன்கள் இருந்ததும் தெரியவந்தது.

இவரும் பவானிசாகர் அணையில் சட்ட விரோதமாக மீன்களை பிடித்து வந்தது தெரியவந்தது. பிடிபட்ட இருவரிடமிருந்தும் சுமார் 65 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.6450 ஆகும். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News