செய்திகள்
மீன்களுக்கு தர்பூசணியை உணவாக போடும் அவலம்

வாங்க வியாபாரிகள் இல்லாததால் மீன்களுக்கு தர்பூசணியை உணவாக போடும் அவலம்

Published On 2020-04-12 20:20 IST   |   Update On 2020-04-12 20:20:00 IST
பவானி அருகே தர்பூசணியை வாங்க வியாபாரிகள் இல்லாததால் அவற்றை மீன்களுக்கு உணவாக போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த வரதநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தாளார்குளம் ஏரி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியில் மேட்டூர் அணையின் இடதுகரை பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டபோது மீதியான தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது இந்த ஏரியில் மீன் வளர்க்க ஒருவர் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து அங்கு மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்காக குளத்தில் உள்ள மீன் குஞ்சுகளுக்கு உணவாக அவர் கருவாடுகளை சிறு சிறு பொடிகளாக்கி 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசலில் சென்று குளத்தில் வீசி வந்தார். அவர் சென்னையில் இருந்து கருவாடுகளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் தடை பட்டதால் அவரால் கருவாடுகளை வாங்க முடியவில்லை. இதனால் மீன்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையில் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தர்பூசணி பயிரிட்டு உள்ள விவசாயிகள் அதை பறித்து விற்க முடியாமலும், வாங்க வியாபாரிகள் கிடைக்காததாலும் அதை அப்படியே விட்டு விட்டனர். இதனால் தர்பூசணிகள் அழுகியும், வெயிலில் வெந்தும் காணப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மீன் பிடிக்க குத்தகை எடுத்த ஒப்பந்ததாரர், பவானி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து அழுகிய மற்றும் வெயிலில் வெந்த தர்பூசணிகளை வாங்கி வந்து ஏரிக்கரையில் குவித்து உள்ளார். அந்த தர்பூசணிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி பரிசலில் கொண்டு சென்று குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக வீசி வருகிறார். அதுமட்டுமின்றி கம்பு, மக்காச்சோளம் போன்றவைகளையும் பொடியாக்கி மீன்களுக்கு உணவாக போடுகிறார்.

Similar News