செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 9 ஆயிரத்து 117 வாகனங்கள் பறிமுதல்

Published On 2020-04-10 11:45 GMT   |   Update On 2020-04-10 11:17 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 9 ஆயிரத்து 117 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 8ஆயிரத்து 971 இருசக்கர வாகனங்களும், 31 மூன்று சக்கர வாகனங்களும், 115 நான்கு சக்கர வாகனங்களும் உள்ளன.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சிலர் வீட்டில் முடங்கி இருக்க முடியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதனால் நோய் பரவும் ஆபத்து அதிகரிக்க கூடும் என்பதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின்பேரில் வெளியில் வரும் நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவையில்லாமல் வெளியில் வந்தது தெரிந்தால் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வைத்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தாலுகா போலீஸ் நிலையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 9 ஆயிரத்து 117 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 8ஆயிரத்து 971 இருசக்கர வாகனங்களும், 31 மூன்று சக்கர வாகனங்களும், 115 நான்கு சக்கர வாகனங்களும் உள்ளன. இது தொடர்பாக 8,820 வழக்குகள் பதிவு செய்து 9 ஆயிரத்து 590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் வாலிபர்கள் வாகனங்களில் வெளியே சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இது போலீசாருக்கு பெரும் தலைவலியை அளித்துள்ளது.
Tags:    

Similar News