செய்திகள்
மருத்துவர் பிரதீபா

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை

Published On 2020-04-10 09:23 GMT   |   Update On 2020-04-10 09:23 GMT
தமிழகத்தில் ஏப்.14-ந்தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் குழுவுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்கள் சார்பில் மருத்துவர் பிரதீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு எடுக்கும் நடவடிக்கை சிறப்பாக உள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News