செய்திகள்
தற்கொலை

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுவுக்கு அடிமையான லாரி டிரைவர் தற்கொலை

Published On 2020-04-07 14:31 GMT   |   Update On 2020-04-07 14:31 GMT
ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுவுக்கு அடிமையான லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அறந்தாங்கி பகுதியில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அறந்தாங்கி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் பலர் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.

இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் மது பாட்டில்கள் கிடைக்காமல் மாற்று வழியில் போதையை தேடி உயிரை இழந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நண்பர்கள் அன்வர் ராஜா, அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் மதுவுக்கு அடிமையானவர்கள். அவர்கள் மது கிடைக்காததால் போதைக்காக ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்து உயிரிழந்தனர். இந்தநிலையில் அறந்தாங்கி பகுதியில் மேலும் ஒருவர் மதுவுக்காக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 57). லாரி டிரைவரான இவரது மனைவி இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆனாலும் வீட்டை விட்டு வெளியேறிய கருப்பையா, தான் வேலை பார்த்து வரும் லாரி செட்டிலேயே தங்கியிருந்தார்.

ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மதுவுக்காக அலைந்த கருப்பையா கிடைக்காததால் மிகவும் விரக்தியடைந்தார். நேற்று லாரி செட் அருகிலேயே உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Tags:    

Similar News