ஆலங்குடியில் விதிகளை மீறி விற்பனை செய்த மதுபானங்கள் பறிமுதல்- 2 பேர் கைது
ஆலங்குடி:
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவால் அரசின் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் மது குடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு பலர் மது பாட்டில்களை வாங்கி, அதை பதுக்கி வைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அதனை கண்காணித்து தடுத்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமாரின் உத்தரவுபடி ஆலங்குடி மது விலக்கு சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தலைமையில் போலீசார் ஆலங்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலங்குடி ஆண்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த மேலநெம்மக்கோட்டை கணேஷ் நகர் சேர்ந்த கனக ராஜ் மற்றும் ஆலங்குடி காமராஜர் தெருவை கருப்பையா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,985 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சமாகும். பின்னர் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.