கொரோனா பரப்பியதாக தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது வழக்கு - தாசில்தார் புகாரின் பேரில் நடவடிக்கை
ஈரோடு:
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து 7 பேர் ஈரோடு மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மத பிரச்சாரம் செய்தனர். அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது. அவர்களில் ஒருவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
மற்ற 6 பேர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த போது 3 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் சுற்றுலா விசா மூலம் ஈரோடு வந்ததாகவும், விசா விதியை மீறி மதப்பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதாகவும், மேலும் தங்களுக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது தெரிந்தும் கூட அவைகள் பொதுமக்களுக்கு பரவும் வகையில் வீடுகளுக்கு சென்று மத பிரச்சாரம் செய்ததாக ஈரோடு தாசில்தார் பரிமளா தேவி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து தாய்லாந்தில் இருந்த வந்த சொவங்க் டொன்றாமரன், வாங்கிமர்பொ, இராமன்தாவசக், லாட்ச் கொரால்டு, சோஹனையாமனட், முகம்மது ஆகிய 6 பேர் மீது பாஸ்போர்ட் விதி மீறல், நோய்களை பரப்புதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.