செய்திகள்
கைது

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

Published On 2020-03-17 09:35 GMT   |   Update On 2020-03-17 09:35 GMT
கூடலூர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய வாலிபர், அவருக்கு உதவியாக இருந்த தாய், சித்தப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

கூடலூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரை கூடலூர் அருகே உள்ள கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த விஜய் (22) என்பவர் காதலித்து வந்தார்.

இந்நிலையில் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விஜயிடம் அந்த இளம்பெண் கேட்டார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்தார். இதனால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மகளின் இந்நிலையை கண்ட பெற்றோர் விஜயின் வீட்டிற்கு சென்று தனது மகளுக்கு விஜயுடன் திருமணம் செய்து வைக்குமாறு விஜயின் தாய் விஜயலலிதா (44), சித்தப்பா ராஜன் (41) ஆகியோரிடம் கேட்டனர்.

ஆனால் அவர்கள் இளம்பெண்ணின் பெற்றோரை தரக்குறைவாக பேசி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து மிரட்டி உள்ளனர். இது குறித்து இளம்பெண் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய விஜய் அவருக்கு உதவியாக இருந்த தாய் விஜயலலிதா, சித்தப்பா ராஜன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News