செய்திகள்
சாலை விபத்து

வாலாஜாபாத் அருகே கார் கவிழ்ந்து ஒப்பந்ததாரர் பலி

Published On 2020-03-15 18:08 GMT   |   Update On 2020-03-15 18:08 GMT
வாலாஜாபாத் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒப்பந்ததாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுந்தர்ராமன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர் தனது நண்பரான செங்கல்பட்டு முல்லை நகரை சேர்ந்த கோகுல் ஆனந்தம் (57) என்பவரின் காரில் பணி நிமித்தமாக காஞ்சீபுரம் சென்று விட்டு மீண்டும் வாலாஜாபாத் வழியாக மதுராந்தகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.

காரை கோகுல் ஆனந்த் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த செல்வம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல் ஆனந்தம் காயம் அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த கோகுல் ஆனந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News