செய்திகள்
வருமானவரித்துறை

கோபி அருகே 3 எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை

Published On 2020-03-11 11:54 GMT   |   Update On 2020-03-11 11:54 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே 3 எண்ணெய் ஆலைகளில் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.
கோபி:

ஈரோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகம் ஆகியோர் கோபி அருகே காமராஜ் நகர் பகுதியில் 3 எண்ணெய் ஆலைகளை நடத்தி வருகின்றனர். இங்கு சமையல் எண்ணெய் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கோவை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டோர் 5 கார்களில் இந்த நிறுவனத்திற்கு வந்து இறங்கினர்.

உடனே அவர்கள் அந்த 3 ஆலைகளுக்கும் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலைகளின் கதவுகளையும் அதிகாரிகள் மூடிவிட்டனர். காலையில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. மேலும் உள்ளேயும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த சோதனை விடிய விடிய நடந்து. இன்று காலை நிறைவு பெற்றது. எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமானத்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News