செய்திகள்
கோப்பு படம்

பந்தலூர் அருகே மாணவியை கடத்தி திருமணம் - வாலிபர் போக்சோவில் சிறையில் அடைப்பு

Published On 2020-03-11 09:48 GMT   |   Update On 2020-03-11 09:48 GMT
பந்தலூர் அருகே மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-1 மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கம் உள்ள உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் தேவாலா போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை சின்ன சேலத்தை சேர்ந்த பெரியசாமி(26) என்பவர் கடத்தி சென்றதும், திருச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பெரியசாமி மாணவியை அழைத்து கொண்டு பந்தலூரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு வந்தார்.

இதுபற்றி அறிந்த தேவாலா போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மாணவிக்கு 17 வயது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியை கடத்தி திருமணம் செய்த பெரியசாமி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மாணவிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News