குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் தண்டவாளத்தை கடந்த காட்டு யானை கூட்டம்
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை கிடைப்பதில்லை.
இதனால் யானை உள்பட வனவிலங்குகள் உணவுக்காக சமவெளி பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில நாட்களாகவே 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அவைகள் அந்த பகுதியில் உள்ள வடுக தோட்டம், சிங்காரா, ஹில்குரோவ் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து உலா வருகின்றன.
இந்த நிலையில் இந்த யானை கூட்டம் குட்டிகளுடன் ஹில்குரோவ் அருகே மலை ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது அந்த வழியாக மலைரெயில் வந்து கொண்டிருந்தது.
ரெயில் வரும் சத்தம் கேட்டதும் யானைகள் ஆக்ரோஷமாக தண்டவாளத்தை கடந்தது. இதை பார்த்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியானார்கள். சுமார் 5 நிமிடம் தாமதத்துக்கு பிறகு மலைரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.