செய்திகள்
கோப்பு படம்

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை

Published On 2020-03-09 10:21 GMT   |   Update On 2020-03-09 10:21 GMT
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை கிடைப்பதில்லை.

இதனால் அவை வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைகிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றன.

கோத்தகிரி அருகே முருகன் காலனி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உதவி வன அலுவலர் பெரியசாமி தலைமையிலான வனத்துறையினர் கால்நடை டாக்டர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் சிறுத்தையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்து உடலை அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கோத்தகிரி அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் வந்தது.

அதன் பேரில் நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கு இறந்து கிடந்தது 6 வயதுடைய ஆண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News