செய்திகள்
சாலை விபத்து

கடலூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி - சாலையோரம் ஆடு மேய்த்தவரும் பலியான பரிதாபம்

Published On 2020-02-23 17:49 GMT   |   Update On 2020-02-23 17:49 GMT
கடலூர் முதுநகர் அருகே கார் கவிழ்ந்து பெண் ஒருவரும், சாலையோரம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தவரும் பலியானார்கள்.
கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே கார் கவிழ்ந்து பெண் ஒருவரும், சாலையோரம் ஆடு மேய்த்துக்கொண்டி ருந்தவரும் பலியானார்கள். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வமணி (வயது 55). இவர் புவனகிரி அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை(52). இவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்வமணி தனது மனைவியை காரில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார். செந்தாமரைக்கு சிகிச்சை முடிந்த பின் இருவரும் காரில் நெய்வேலிக்கு திரும்பினர். காரை செல்வமணி ஓட்டி சென்றார்.

கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையில் உள்ள கடலூர்-விருத்தாசலம் சாலையில் சென்ற போது அங்கு சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னதுரை (53) மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் கார், அவரது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் காரில் பயணம் செய்த செந்தாமரையும் சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வமணி படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News