செய்திகள்
மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

ஒரத்தூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-02-22 16:15 GMT   |   Update On 2020-02-22 16:15 GMT
நாகப்பட்டினம் ஒரத்தூரில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைக்க முதல்-அமைச்சர் எப்பாடி பழனிசாமி, அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி நாகைக்கு வருகிறார். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

நாகை மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான புதிய மருத்துவக்கல்லூரி ஒரத்தூரில் அமைய உள்ளது. அரசின் தீவிர முயற்சியால், ஒரே ஆண்டில் தமிழகம் முழுவதும் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி ஆணை பெறப்பட்டுள்ளன. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் மருத்துவக்கல்லூரியினை கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் 12 மருத்துவக்கல்லூரிகள் அமைத்திட அனுமதி ஆணை பெற்றுள்ளது. மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி பெற்றதோடு நின்றுவிடாமல், உடனடியாக நிதி ஒதுக்கி, இடம் தேர்வு செய்து, மதிப்பீடுகள் செய்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாகை ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் 60.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.366.85 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 150 மாணவ-மாணவிகள் பயிலும் வகையில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.123.05 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை, ரூ,119.03 கோடி மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரி, ரூ.124.77 கோடி மதிப்பீட்டில் மருத்துவ பேராசியர்கள், பணியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் ஆகியவை உள்ளிட்ட 21 கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

இவற்றில் 6 அடுக்குகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், மருத்துவக்கல்லூரி, நிர்வாக அலுவலகங்கள், செவிலியர்களுக்கான குடியிருப்புகள், வங்கி, அஞ்சலகம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பிணவறை ஆகியவையும் அடங்கும். தற்போது, இப்பகுதியில் மண் பரிசோதனை, கருவேலமரங்களை அகற்றுதல், மண் சமப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேறகாள்ளப்பட்டு வருகின்றன.

வருகிற மார்ச் மாதம் 7-ந் தேதி, முதல்-அமைச்சரால் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இந்த கல்லூரி அமைய இருப்பது நாகை மாவட்டத்துக்கு சிறப்பை பெற்று தரக்கூடியதாக உள்ளது. கல்லூரி முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், தாசில்தார் பிரான்சிஸ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News